மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

ஊதா நிறப்பூனையின்
சாப்பாட்டிற்கான
கொஞ்சம் துரத்தல்.....
சாப்பாடோ தப்பி பிழைத்து
பயந்து ஓடுதல்.....
நேரம் கிடைத்தால்
சமையல் பாத்திரத்தால்
தலையில் விடும் அடி!
இருந்தாலும்....
சமயத்தில் .....
பசி இல்லை என்றாலும்
குணம் மாறமுடியாமல்
பூனையின் எலி வேட்டை!
சிறிய வயது சித்திரக்கதை
சிரிப்பாய்தான் இருந்தது
எலியிடம் சினேகம்கூட
எனக்குள் வளர்ந்தது.


எலிப்பொறி வடையை
கடித்த எலிக்கு மீட்புகூட
என்னால் கிட்டியது.
தப்பித்தவற்றின் வாழ்த்தும்
பெரியப்பாவின் கையில்
உயிர் விட்டவற்றின்
வெள்ளையுடை பாடல்களும்
உறங்கும்போது வந்தன.
எப்போதாவது பரிட்சையில்
தோற்றுபோனபோது .....
சின்ன சின்ன அடிபட்டு
இரத்தம் வந்தபோது....
குண்டுமணிக் கண்களின்
பழிவாங்கிய பார்வை
நினைவிற்குள் வந்தது.
சின்ன சந்தேகம்கூட வந்தது.
இறந்த பிறகு எலியெல்லாம்
பிள்ளையாரின் வாகனமானதா?


இப்போதுகூட...
------ ------ பூனைகளின்
பசி இல்லை என்றாலும்....
குணம் மாறமுடியாமல்
எலி வேட்டை தொடர்கிறது.
சிரிப்புதான் வரவில்லை
ஆனால்,
இன்றைக்கும் எலியிடம்
பிரியம் மாறாமல் .....
தப்பிக்கும் வழி தெரியவும்,
உயிர் தப்பி வாழவும்,
அப்பாவி எலிகளுக்காக
இறைவனிடம் வேண்டுகிறேன

ஆமாம்,
எலியிடம் பிள்ளையாருக்கு
இன்றும் கருணை உள்ளதா?


32 comments:

இன்றைக்கும் எலியிடம்
பிரியம் மாறாமல் .....
தப்பிக்கும் வழி தெரியவும்,
உயிர் தப்பி வாழவும்,
அப்பாவி எலிகளுக்காக
இறைவனிடம் வேண்டுகிறேன்/// உங்களின் வலி புரிகிறது..

//இப்போதுகூட...
------ ------ பூனைகளின்
பசி இல்லை என்றாலும்....
குணம் மாறமுடியாமல்
எலி வேட்டை தொடர்கிறது//

உண்மைதான் . பசியில்லை என்றாலும் குணம் மாறா எலிவேட்டை மனதை கனக்கச் செய்கிறது. இதயத்தில் இரத்தம் வழிகிறது. யார் இதற்கு முடிவு கட்டுகிறார்கள் என்று பார்ப்போம்.

சின்ன சந்தேகம்கூட வந்தது.
இறந்த பிறகு எலியெல்லாம்
பிள்ளையாரின் வாகனமானதா?//

எலி - குட்டி நினைவுகள்..
கனவிலே பிள்ளையாரிடம்
கேட்டுச் சிரிக்கும் பிள்ளைகள்..

அருமையான எலி,
அருமையான கவிதை.

Aha
Very fine Kavidai.
viji

//எலியிடம் சினேகம்கூட
எனக்குள் வளர்ந்தது. //

ஒரு சிற்றுயிர் மேல் இரக்ககுணம் கொண்டு சிந்தித்து ஒரு கவிதை எழுதும் தங்களின் இளகிய அன்பு மனம், எனக்கு மலையென மலைப்பை ஏற்படுத்துகிறது.

பாராட்டுக்கள்.

கவிதையில் சிறு உயிரினம் பற்றிய கருணை. அருமை.


தமிழ்வாசியில்: அட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்

இதில் ஏதாவது உள்ளார்ந்த குறியீடு உள்ளதா ???

கருணை கடலே
எலியின் பாதுகாவலரே
வாழ்க ...


எலி பண்ற சேட்டை உங்களுக்கு தெரிந்தும்
அதன் மீது அவ்ளோ பாசம்
ஒரு புது சட்டையை அல்லது
ஒரு லெதர் பையை கடித்து வைக்கும்போது ...அப்போது கோவம் வருமா வராதா?

வணக்கம் வருகைக்கு நன்றி திரு.கருன்

என் பர்வையை புரிந்து கொண்டமைக்கு நன்றி கடம்பவனக்குயில்.

சிறிய வயதில் அப்படித்தான் தோன்றியிருக்கும். குட்டி பிள்ளையார், குட்டி எலி. நன்றி தோழி.

நன்றி திரு.தமிழ் உதயம்.

பாராட்டிற்கு நன்றி விஜி மேடம்

சிறிய உயிர்களிடம் கருணையுடன் இருக்கும்படி சொன்னது பள்ளிகாலப்பாடம். இப்போது...... எளியார், வலியார் விதிமுறைகள் ஃபாலோ செய்யப்படவில்லையே. நன்றி சார்.

வருகைக்கு நன்றி திரு.பிரகாஷ்.

முதல் பகுதி சிறிய வயது கள்ளமறியா நியாயம் சார். மூன்றாவது பகுதி கள்ளத்தை அறிந்து கொண்ட குமுறல் . எளி(லி)யார் அப்படித்தானே மதிக்கப்படுகிறார்கள். நன்றி எல்.கே சார்.

வாங்க சிவா வணக்கம். பூனைக்கு எலி என்ன செய்தது என்றுதான் கேட்கிறேன். உங்களுக்கு ஒரு சிறிய நட்டம் தந்ததால் பூனைக்கு நண்பனாகிவிடுவீர்களா?. இதுதான் நான் சொல்ல வருவதும் - உங்களுக்கு பணம் நட்டம் , பூனைக்கு ஒரு வேளை சாப்பாடு, எலிக்கோ உயிரே நட்டம். எளியார் நியாயம் மறுக்கப்பட்டுவிட்டனவே. நாம் எலியை கொல்ல பூனைகளை வளர்க்க வேண்டாம்.

என்னதான் கவனிக்காததுபோல் இருந்தாலும் சில விசயங்கள் - எழுத்தாளனின் அடி மனதில் வலித்துக்கொண்டுதானே இருக்கும். எப்போதாவது குறியீடாக வெளிவரத்தானே செய்யும். சரிதானே திரு.எல்.கே.

அருமை.

Thank you geetha

தங்கள் விளக்கம் கொடுத்ததுபோல
முதல் பகுதியில் எலியார் எனவும்
இரண்டாம் பகுதியில்
எளியாருக்கு குறீயீடாகவும்
எலியை பயன்படுத்தியுள்ளதை ரசித்துப்படித்தேன்
பூனையாருக்கு முன் கொடுத்திருந்த.........
மிக அர்த்தம் பொருந்தியதாக உள்ளது
வலிய விஷயங்களை எளிய வார்த்தைகளில்
சொல்லிப்போகும் சிறந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

பிள்ளையாருக்கு கருணை இருக்கிறதோ இல்லையோ... உங்கள் கருணையால் எலிகளுக்கும் ஒரு அருமையான கவிதை கிடைத்துவிட்டது, சாகம்பரி. பூனைகளிடமிருந்தும் தப்பிவிடும் சில எலிகள். காலம் முழுவதும் தங்கள் வாழ்வைப் பிறர் வசம் ஒப்படைத்திருக்கும் பாவப்பட்ட சோதனை எலிகளின் வாழ்வு பற்றி என்றாவது யோசித்திருக்கிறீர்களா?

எலியிடம் பிள்ளையாருக்கு கருணை இல்லாமலா? அது எப்போதும் இருக்குமே! நல்ல கவிதை.

வாழ்க்கை போராட்டம் எலிக்கு மட்டுமா? நல்ல பதிவு அம்மா. . .

நல்ல குறியீட்டுக் கவிதை. எளிமையான சொற்களில் வாழ்க்கையின் அவலத்தைப் பிரதிபலிக்கிறது. சில இடங்களில் நாம் பூனையாய் துரத்துகிறோம். சில நேரங்களில் எலியாய் ஓடி ஒளிகிறோம். நமக்குமான வாழ்க்கையில் இரண்டும் மாறிமாறித்தான். நன்றாக இருக்கிறது கவிதை. அருமை. முதல் வருகையாக வந்தேன். இனி வாய்ப்பமைவில் தொடர்வேன்.

வாழ்த்துக்களுக்கு நன்றி ரமணி சார்.

சோதனை எலிகளும், உணவிற்காகவே வளர்க்கப்படும் போந்தா கோழிகளும் என்னை சிந்திக்க வைத்திருக்கின்றன, கீதா. எப்போதாவது பேசலாம். Thank you friend.

தங்கள் கருத்தை நல்ல அடையாளமாகவே கொள்கிறேன். நன்றி திரு.சண்முகவேல்.

வணக்கம் பிரணவன். வருகைக்கு நன்றி.
this is your topic - suppose to be.

வணக்கம் சார். முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. முடிந்தபோது வாருங்கள்.

அருமையான கவிதை.